திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.46 திருக்கருகாவூர் பண் - கௌசிகம் |
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
1 |
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
2 |
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகழை யாவழை யாவருங்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
3 |
பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
4 |
மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
5 |
மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
|
6 |
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
|
7 |
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
8 |
பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
9 |
போர்த்த் மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
|
10 |
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |